கழுகுக்கு வாக்களித்த யாழ். மக்கள் – அனுரகுமாரவுக்கு ஏமாற்றம்
சிறிலங்கா அதிபர் தேர்தலில் வடக்கில் பெரும்பாலான தொகுதிகளில் எதிர்பாராத வகையில் கழுகு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் ஆரியவன்ச திசநாயக்க, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பெற்றிருக்கிறார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பரப்புரைகளில் ஈடுபடாத அவருக்கு இந்தளவு வாக்குகள் கிடைத்திருப்பதும், பெரும் பரப்புரைகளை மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க படுமோசமான பின்னடைவைச் சந்தித்திருப்பதும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
சஜித் பிரேமதாசவின் அன்னம் சின்னத்துக்கு வாக்களிக்க முற்பட்ட வாக்காளர்கள், கழுகு சின்னத்துக்கு வாக்களித்திருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அதுபோல, அனுரகுமார திசநாயக்கவின் பெயரும், ஆரியவன்ச திசநாயக்கவின் பெயரும் கிட்டத்தட்ட ஒத்துப் போவதால், அனுரகுமாரவுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் ஆரியவன்சவுக்கு கிடைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
அனுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் பிரபலமான வேட்பாளராக இருந்த போதும், அவர் போட்டியிட்ட திசைகாட்சி சின்னம் அந்தளவுக்கு பிரபலப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.