எம்சிசிக்கு எதிரான உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் பௌத்த பிக்கு
அமெரிக்காவுடன் எம்சிசி கொடை உடன்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த பௌத்த பிக்கு, நேற்றிரவு தமது போராட்டத்தைக் கைவிட்டார்.
எம்சிசி கொடை உடன்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திடக் கூடாது எனக் கோரி, வண. உடுதும்பர காஷ்யப்ப தேரர் என்ற பௌத்த பிக்கு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்றுக்காலை தொடக்கம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
எம்சிசி உடன்பாடு நாட்டின் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று, உடுதும்பர காஷ்யப்ப தேரரில் ஆதரவாளர்கள் அறிக்கை ஒன்றில் கூறியிருந்தனர்.
இந்த நிலையில், அதிபர் தேர்தலுக்கு முன்னதாக உடன்பாட்டில் கையெழுத்திடப்படாது என சிறிலங்கா அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை அடுத்து, அவர் நேற்றிரவு தமது போராட்டத்தைக் கைவிட்டார்.
அத்துடன், எம்சிசி உடன்பாடு தொடர்பாக, அதிபர் வேட்பாளர்களான சஜித் பிரேமதாசவும், கோத்தாபய ராஜபக்சவும், உடுதும்பர காஷ்யப்ப தேரருக்கு தனித்தனியாக உறுதிமொழிக் கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.