சிறிலங்கா அதிபர் தேர்தல்- ரெலோவின் முடிவு இன்று
சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக பெரும்பாலான கட்சிகள் முடிவெடுத்து விட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான, ரெலோ இன்று தமது முடிவை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தகவல் வெளியிடுகையில்,
“நாம் இன்னமும் தீர்மானம் எதையும், எடுக்கவில்லை. இன்று எமது கட்சியின் உறுப்பினர்கள் கூடி எமது நிலைப்பாடுகள் குறித்து ஆராயவுள்ளோம்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தீர்மானம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.
அதேவேளை, வெறுமனே ஒரு வேட்பாளரை வீழ்த்த இன்னொரு வேட்பாளருக்கு அர்த்தமற்ற ஆதரவை வழங்கவும் முடியாது.
நாம் ஒரு அதிபர் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றால், எமது மக்கள் சார் விடயங்களில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாது ஒரு வேட்பாளரை வெற்றிபெற செய்ய எமது மக்களை ஏமாற்ற முடியாது.
சில தீர்மானங்களில் நாம் உறுதியாக உள்ளோம். எமது நிலைப்பாடுகள் குறித்து நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் பேசுவோம். எம்முடன் பேசவும் அவர் தயாராக உள்ளார்.
இன்று நாம் எமது முடிவை அறிவிப்போம்” என்று கூறினார்.