மேலும்

‘நாற்காலி’ சின்னத்தில் 17 கட்சிகளின் கூட்டணி – கோத்தா தலைமை?

2020 நாடாளுமன்றத் தேர்தலில் நாற்காலி சின்னத்தில் போட்டியிடுவதற்காக, பொதுஜன பெரமுனவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து, 17 கட்சிகளின் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளன.

சிறிலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு என்ற பெயரில், உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டணியின் புரிந்துணர்வு உடன்பாடு கொழும்பில் நேற்று கையெழுத்திடப்பட்டது.

பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் முன்னிலையில், இந்த உடன்பாட்டில், 17 கட்சிகளின் செயலர்கள் கையெழுத்திட்டனர்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, லங்கா சமசமாசக் கட்சி, ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,  உள்ளிட்ட 17 கட்சிகள் இந்த புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டன.

இந்த நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜிஎல்.பீரிஸ், தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஆகியோரும் கலந்து கொண்டனர்.

எனினும், இந்த புதிய கூட்டணியின் இணைத் தலைவர்களாக பெயரிடப்படவுள்ளனர் என்று எதிர்பார்க்கப்படும், மகிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

அத்துடன் இதொகா தலைவர் ஆறுமுகன் தொண்டமானும் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக செந்தில் தொண்டமான் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *