சட்டமா அதிபரின் ஒப்புதலுடனேயே எம்சிசி உடன்பாடு தயாரிப்பு
மிலேனியம் சவால் நிறுவன உடன்பாடு சட்டமா அதிபரின் ஒப்புதலுடன் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 480 மில்லியன் எம்சிசி நிதிக்கொடை உடன்பாட்டுக்கு மகிந்த ராஜபக்ச மற்றும் கூட்டு எதிரணியினர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையிலேயே நிதியமைச்சு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
“முழு செயல்முறைகள் மற்றும், இறுதி உடன்பாடுகள் சட்டமா அதிபரின் வழிகாட்டுதலின் கீழும், சட்ட வரையறைகளுக்குள்ளும் தான் செய்யப்பட்டன.
அமைச்சரவையினால் அனுமதிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவே, கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம், இந்த உடன்பாடு குறித்த இறுதிக்கட்டப் பேச்சுக்களில் பங்கேற்றிருந்தது“ என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.