கொழும்பு துறைமுக நகர காணி உறுதிப் பத்திரம் சீனாவிடம் கையளிப்பு
கொழும்பு துறைமுக நகரததின் திருத்தப்பட்ட காணி உறுதிப் பத்திரம், நேற்று சீன நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், இந்தப் பத்திரம் சீன நிறுவன அதிகாரிகளிடம் சீனத் தூதுவர் செங் ஷியுவான் மற்றும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில், ஒப்படைக்கப்பட்டது.
முதலில் இந்த காணி, நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதையடுத்து, சீனாவின் CHEC போர்ட் சிற்றி கொழும்பு நிறுவனத்துக்கு, குத்தகை உடன்பாட்டின் கீழ், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ளது.
பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலர் நிகால் ரூபசிங்க முதலில் இந்த ஆவணத்தை, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் ரத்நாயக்கவிடம் கையளித்தார்.
அதையடுத்து, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் ரத்நாயக்க, குத்தகை உடன்பாட்டு ஆவணத்தை CHEC போர்ட் சிற்றி கொழும்பு நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளர் ஜியாங் ஹோலியாங்கிடம் ஒப்படைத்தார்.