மேலும்

கோத்தாவுடன் உடன்பாடு – மொட்டு மேடையில் ஏறமாட்டோம்

சிறிலங்கா பொதுஜன முன்னணியுடனும், அதன் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடனும்,  புரிந்துணர்வு உடன்பாடுகளைச் செய்து கொண்டுள்ள போதும், அந்தக் கட்சியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி பரப்புரைகளை மேற்கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று புரிந்துணர்வு உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது.

கொழும்பில் நடந்த இந்த நிகழ்வில், சுதந்திரக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகரவும், கோத்தாபய ராஜபக்சவும் உடன்பாட்டில் கையெடுத்திட்டனர்.

இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டாலும், கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ள போதும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பேரணிகளில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பங்கேற்காது என்று சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நடந்த கட்சியின் மத்திய குழுக் கூட்டத்துக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட அவர்,

“பொதுஜன பெரமுன பேரணிகளில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சந்தித்த துன்புறுத்தல்களை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கும் 5 ஆயிரம் கூட்டங்களை சிறிலங்கா சுதந்திரக் கட்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

அத்துடன் வீடு வீடாகச் சென்று சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பரப்புரை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், நாங்கள் பொதுஜன பெரமுனவின் மேடையில்- அவர்களுடன் இணைந்து ஏறுவதற்கு தயாரில்லை.

நாங்கள் அடிமட்டத்தில் இருந்து பணியாற்றுவோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *