சிறிலங்காவுக்கான புதிய தூதுவரின் நியமனத்தை ரத்து செய்தது பாகிஸ்தான்
சிறிலங்காவுக்கான தூதுவராக அனுப்பப்படவிருந்த முன்னாள் இராணுவ அதிகாரியின் நியமனத்தை பாகிஸ்தான் அரசாங்கம் ரத்துச் செய்திருக்கிறது.
சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவராக இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஷாஹிட் ஹஸ்மத்துக்குப் பதிலாக, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சாட் ஹட்டாக்கை சிறிலங்கா தூதுவராக நியமிப்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முடிவு செய்திருப்பதாக, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.
எனினும், இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்ட மறுநாள், பாகிஸ்தான் அமைச்சரவையில், மேஜர் ஜெனரல் சாட் ஹட்டாக், சிறிலங்கா தூதுவராக நியமிக்கப்படுவதற்கு, பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் ஹட்டக் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதையடுத்து, மேஜர் ஜெனரல் ஹட்டாக்கை, சிறிலங்காவுக்கான தூதுவராக நியமிக்கும் முடிவை பாகிஸ்தான் அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது.