கோத்தாவின் குடியுரிமைக்கு எதிரான மனு தள்ளுபடி
பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை சிறிலங்கா குடிமகனாக ஏற்றுக் கொள்வதை தடுக்கும், உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
காமினி வியாங்கொட, பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர ஆகியோர் தாக்கல் செய்திருந்த இந்த மனு மீது நேற்று முன்தினமும், நேற்றும், இன்று காலையிலும், விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.
மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையிலான, நீதியரசர்கள் அர்ஜுன் ஒபேசேகர, மகிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
இன்று காலை தொடக்கம் நடந்த விசாரணைகளை அடுத்து, பிற்பகல் 3.15 மணிக்கு முன்னதாக சமர்ப்பணங்களை செய்ய காலஅவகாசம் அளிக்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சற்று முன்னர் தீர்ப்பை அறிவித்த நீதியரசர் யசந்த கோத்தாகொட தலைமையிலான குழாம், இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக ஒருமனதாக அறிவித்துள்ளது.