மேலும்

புத்தளத்தில் மற்றொரு ஆயுதக் கிடங்கு – வில்பத்தில் பாரிய தேடுதல்

புத்தளம் – வனாத்தவில்லு பகுதியில் மற்றொரு தொகுதி ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தகவல்வெளியிட்டுள்ளது.

வனாத்தவில்லு, கரடிப்பூவல், லக்ரோ தோட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று முன்தினம் நடத்திய தேடுதலின் போதே இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த ஜனவரி மாதம், 17ஆம் நாள் இங்கிருந்து பெருமளவு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்த இடத்தில் இருந்தே மற்றொரு தொகுதி ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில், ரி-56 துப்பாக்கி ஒன்றும், பல 9 மி.மீ கைத்துப்பாக்கிகள் பலவும், உள்ளூர் தயாரிப்பு கல்கட்டாஸ் துப்பாக்கிகளும் உள்ளடங்குகின்றன.

குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் சாரதி கைது செய்யப்பட்டதை அடுத்து வழங்கிய தகவலின் பேரிலேயே இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இவர், மாவனெல்லவில் புத்தர்சிலைகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவங்கள், மற்றும் வவுணதீவில் இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவராவார்.

மன்னார், வில்பத்து பகுதிகளில் பாரிய தேடுதல்கள்

மன்னார், வில்பத்து பகுதிகளில் உள்ள கிராமங்களில் நேற்று மாலையில் இருந்து பாரிய தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை, இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் இந்த தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றன.

சந்தேகத்துக்குரிய வீடுகள் மற்றும் காட்டுப் பகுதிகளில் இந்த தேடுதல்கள் இடம்பெறுகின்றன.

இந்தப் பகுதிகளில் தீவிரவாதிகள் மறைந்திருக்கலாம் என்றும், ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கிடைத்த தகவல்களை அடுத்தே இந்த தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *