மேலும்

சஹ்ரானின் மனைவி, குழந்தை சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் தப்பினர்

கல்முனை – சாய்ந்தமருதில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில், காயங்களுடன் மீட்கப்பட்ட பெண், மற்றும் குழந்தை, சஹ்ரான் காசிமின் மனைவி மற்றும் குழந்தை, என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 21ஆம் நாள் சிறிலங்காவில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் முக்கியமான சூத்திரதாரியாக கருதப்படுபவர் சஹ்ரான் காசிம்.

அவரது குடும்பத்தினர் இந்த தாக்குதல் நடப்பதற்கு சில நாட்கள் முன்னதாகவே காத்தான்குடியில் உள்ள வீட்டில் இருந்து  தலைமறைவாகியிருந்தனர்.

இவர்கள், சாய்ந்தமருதில் ஒரு வாடகை வீட்டில் பதுங்கியிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை படையினர் அதனைச் சுற்றிவளைத்துக் கொண்டனர். அதையடுத்து, அங்கு தற்கொலைக் குண்டுதாரிகள் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, நேற்றுமுன்தினம் காலை அந்த வீட்டுக்குள் நுழைந்து தேடுதல் நடத்தப்பட்ட போது, பெண் ஒருவரும், குழந்தையும் காயங்களுடன் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையிலேயே அவர்கள் இருவரும், குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரியான தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் காசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சதீயாவும், அவரது நான்கு வயதுடைய மகள் சஹ்ரான் ருசாய்னியா  என்று தெரியவந்துள்ளதாக, .சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

காயமடைந்த இவர்கள் அம்பாறை தள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை, சஹ்ரானின் சகோதரியும், அவரது கணவனும் அடையாளம் காட்டியுள்ளனர்.

சஹ்ரானின் மனைவி காலில் காயமடைந்துள்ள நிலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத்தின் 24 ஆவது டிவிசனின் தளபதி மேஜர் மகிந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

மகளுக்கு முகத்திலும், உடலிலும் எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *