மேலும்

அதிபர் தேர்தலில் போட்டி – 100 வீதம் உறுதி என்கிறார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாபய ராஜபக்ச வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

”நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது 100 வீதம் உறுதியானது.

அமெரிக்காவில் எனக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் அடிப்படையற்றவை. தேர்தல் பரப்புரைக்கான எனது நடவடிக்கைகளை திசை திருப்புகின்ற சிறிய நடவடிக்கை.

அமெரிக்க குடியுரிமையை நீக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறேன். அந்த  விடயம் விரைவில் முடிந்து விடும். தேர்தலில் போட்டியிடுவதற்கான் வழி திறக்கப்படும்.

நான் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால், உடனடியாக,  இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும். பாதுகாப்பு கட்டமைப்பு மீளமைக்கப்படும்.

இது ஒரு திவிரமான பிரச்சினை. இந்தக் குழுக்களின் செயற்பாடுகளை ஆழமாகச் சென்று அதன் வலையமைப்புகளை அழிக்க வேண்டும்.

புலனாய்வு சேவைகளை கட்டியெழுப்புவதன் மூலமும், பொதுமக்களைக் கண்காணிப்பதன் மூலமும், இஸ்லாமிய அடிப்படைவாதம் பரவுவதை தடுக்க முடியும்.

2011ஆம் ஆண்டு 5000 பேரைக் கொண்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவு கட்டியெழுப்பப்பட்டது. அவர்களில் சிலர் அரபி மொழி பேசக் கூடியவர்கள். அவர்கள் தற்போதைய அரசாங்கத்தினால் கலைக்கப்பட்டனர்.

புலனாய்வு வலையமைப்புகளை கலைக்காமல் இருந்திருந்தால் இந்த அரசாங்கத்தினால் இந்த தாக்குதல்களைத் தடுத்திருக்க முடியும். போரின் போதும் போருக்குப் பின்னரும், விரிவான கண்காணிப்பு திறனை  நான் கட்டியெழுப்பியிருந்தேன்.

தேசிய பாதுகாப்புக்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்கள், நல்லிணக்கம், மனித உரிமைகள், தனிநபர் சுதந்திரம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு. எப்படி நடந்தது, யார் பின்னணி, என்ற தெளிவான தகவல்களை அரசாங்கத்தினால் வழங்க முடியவில்லை.

பலரும் பலரையும் விமர்சிக்கின்றனர். என்ன நடந்தது என்ற சரியான தகவல்களைக் கொடுக்கவில்லை.

எந்த அமைப்பு இதனைச் செய்தது,  அவர்கள் இந்தளவுக்கு எப்படி வந்தார்கள்,  என்ற விபரங்களை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் கொடுக்கவில்லை.” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *