மேலும்

சிறிலங்கா கடற்படை அதிகாரியின் முறைப்பாட்டில் முல்லைத்தீவு ஊடகவியலாளர் கைது

முல்லைத்தீவில் சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவரை தாக்கினார் என செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 7ஆம் நாள் முல்லைத்தீவு கடற்படைத் தளத்துக்கு முன்பாக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, அச்சுறுத்தும் வகையில் படங்களை எடுத்த ஒருவரை ஊடகவியலாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களும் பிடித்தனர்.

அவர் தான் சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்தவர் என்று கூறியதை அடுத்து, சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்துக்கு பழிவாங்கும் வகையில் குறித்த கடற்படை அதிகாரியே, ஊடகவியலாளர் ச.தவசீலன் மீது முறைப்பாடு செய்திருந்தார்.

தன்னை தாக்கினார் என்று சிறிலங்கா கடற்படை அதிகாரி செய்த முறைப்பாடு தொடர்பாக, ஊடகவியலாளர் தவசீலனிடம் முல்லைத்தீவு காவல்துறையினர் கடந்த வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.

மீண்டும் நேற்றுக்காலை அவரை விசாரணைக்கு அழைத்த காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, பிணையில் செல்ல அனுமதித்த நீதிவான், வழக்கை 30ஆம் நாளுக்கு ஒத்திவைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *