மேலும்

அரசியலமைப்பு சபை உறுப்பினர் நியமனம் – சம்பந்தனுக்கு அறிவிக்கப்படவில்லை

அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நியமிக்கப்பட்டமை தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று இரா.சம்பந்தனின் ஊடகச் செயலாளர் ரகு பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் நடந்த அரசியலமைப்பு சபைக் கூட்டத்தில், சமல் ராஜபக்சவின் பதவி விலகலால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு இரா.சம்பந்தனை நியமிப்பதற்கான யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்திருந்தார்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரை முன்மொழிந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருக்கிறது என்றும், எனவே இரா.சம்பந்தன், அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக முடியாது என்றும் மகிந்த ராஜபக்ச கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார்.

எனினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூட்டமைப்புக்கு நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்கள் இருக்கின்ற நிலையில், ஒரு ஆசனத்தைக் கொண்டுள்ள ஈபிடிபிக்கு அரசியலமைப்பு சபையில் இடமளிக்கப்படுவது அநீதி என்று சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், டக்ளஸ் தேவானந்தாவை நியமிப்பதற்கான முன்மொழிவை விலக்கிக் கொள்ள மகிந்த ராஜபக்ச இணங்கினார்.

இதையடுத்தே இரா.சம்பந்தனை நியமிக்க இணக்கம் காணப்பட்டது.

எனினும், அரசியலமைப்பு சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் இரா.சம்பந்தனுக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்று அவரது ஊடகச் செயலாளர் ரகு பாலச்சந்திரன் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு, தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *