அட்மிரல் கரன்னகொட மீண்டும் விசாரணைக்கு அழைப்பு
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் 14 ஆவது சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை, எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் நாள் மீண்டும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் இருந்து தப்பித்தும், கைது செய்யப்படுவதில் இருந்தும் தப்பிக்கவும், மறைந்து வாழ்ந்த அட்மிரல் வசந்த கரன்னகொட, உச்சநீதிமன்றத்தின் மூலம், தன்னைக் கைது செய்வதற்குத் தடை ஆணையைப் பெற்றிருந்தார்.
அதேவேளை, அட்மிரல் கரன்னகொடவை குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கமைய, அட்மிரல் கரன்னகொடவிடம், இதுவரை மூன்று தடவைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வாக்குமூலம் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் நான்காவது தடவையாக அவரை எதிர்வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு முன்னிலையாகும்படி குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த வாரம் அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர், குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி நிசாந்த சில்வா வரும் ஏப்ரல் 9ஆம் நாள் விசாரணைகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.