கொச்சியில் சிறிலங்கா கடற்படைத் தளபதி
இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, தற்போது மூன்று நாட்கள் பயணமாக கொச்சியில் உள்ள இந்திய கடற்படையின் தென்பிராந்திய தலைமையகத்தில் தங்கியுள்ளார்.
சிறிலங்கா கடற்படைத் தளபதி தலைமையிலான குழு, நேற்று முன்தினம் கொச்சியில் உள்ள இந்திய கடற்படையின் தென்பிராந்திய தலைமையகத்துக்கு பயணம் மேற்கொண்டது.
நேற்று இந்தக் குழுவினர் இந்திய கடற்படையின் தென்பிராந்திய தளபதி வைஸ் அட்மிரல் ஏகே சாவ்லாவை சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.
இதையடுத்து, தென்பிராந்திய தலைமையகத்தின் பயிற்சிகள் தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டது.
தற்போது இந்திய கடற்படையின் தென்பிராந்திய தலைமையகத்தின் கீழ், பல்வேறு பிரிவுகளின் கீழ், 95 சிறிலங்கா கடற்படை அதிகாரிகளும் 67 கடற்படையினரும் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர்.
இன்று எழிமலவில் உள்ள இந்திய கடற்படை பயிற்சி அகடமிக்கு செல்லும் சிறிலங்கா கடற்படைத் தளபதி அங்குள்ள பயிற்சி வசதிகள் குறித்து அதன் கட்டளை அதிகாரி வைஸ் அட்மிரல் பண்டிட்டுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
தற்போது அங்கு பயிற்சி பெறும் 17 சிறிலங்கா கடற்படையினரையும் அவர் சந்திக்கவுள்ளார்.