மேலும்

கொழும்பில் மீண்டும் வதிவிட பாதுகாப்பு ஆலோசகர் பணியகத்தை அமைத்தது பிரித்தானியா

சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்காவில் உள்ள பிரித்தானிய துதரகத்தில், வதிவிட பாதுகாப்பு ஆலோசகர் பணியகத்தை பிரித்தானியா மீண்டும் அமைத்துள்ளது.

பொறுப்புக்கூறல் விவகாரங்களினால், ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், சிறிலங்காவுடனான பாதுகாப்பு உறவுகளை பிரித்தானியா நிறுத்தி வைத்திருந்தது.

பாதுகாப்பு உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதாக, 2015இல் அறிவித்ததில் இருந்து, சிறிலங்காவுடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு உறவுகளை, புதுடெல்லியில் இருந்து, வதிவிடமற்ற பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் கையாண்டு வந்தார்.

இந்த நிலையில் மீண்டும் கொழும்பில், வதிவிட பாதுகாப்பு ஆலோசகர் பணியகத்தை அமைக்க பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரித்தானிய தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்றுள்ள கேணல் டேவிட் ஆஷ்மன் சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை நேற்று முன்தினம் அவரது பணியகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

அத்துடன்,  சிறிலங்காவின் முப்படைத் தளபதிகளையும் அவர் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்புகளில், புதுடெல்லியில் இருந்து வதிவிடமற்ற பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய குறூப் கப்டன் பிரேசர் நிக்கல்சனும் கலந்து கொண்டார்.

கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரக பேச்சாளர் இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கொமன்வெல்த் பங்காளர் மற்றும் நண்பன் என்ற வகையில், சிறிலங்காவுடன் பாதுகாப்பு விவகாரங்களில் நெருக்கமாகப் பணியாற்றவும், சிறிலங்கா ஆயுதப்படைகள் தம்மை நவீனமயப்படுத்துவதற்கும், மறுசீரமைப்பதற்கும் ஆதரவு அளிப்பதற்கும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சாதகமான பங்கை அவர்கள் வகிப்பதற்கும், கொழும்பில் வதிவிட பாதுகாப்பு ஆலோசகர் பணியகம் மீண்டும் அமைக்கப்படுவது உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *