மேலும்

தாயகக் கனவினை தோளினில் சுமந்தோரை நினைவினில் நிறுத்தும் நாள்

தாயகக் கனவினைத் தோளினில் சுமந்து,

சுதந்திரக் காற்றின் சுவாசத்துக்காய்

தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை

நினைவு கொள்ளும் நாள் இன்று.

பாதைகள் பலவாயினும்

இவர்களின் பயணம்

ஒன்று தான்.

காடுகள், மேடுகள்,

கடும் வதைமுகாம்கள்,

ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள்

எங்கும் இவர்கள்

விதைகளாகவே வீழ்ந்தனர் –

விருட்சங்களாய் எழுவதற்கு.

கல்லறைகளாய் முளைத்தவர்களைக் கூட,

காணாமற்போகச் செய்த

பேயாட்சி நடக்கும் தேசத்தில்,

தமிழர்

நெஞ்சறையில் இடம்பிடித்த

வீரர்கள் இவர்கள்.

முகம் தெரிந்தும், தெரியாமலும்

மூச்சடங்கினாலும்,

வீச்சுடன்

விழுது பரப்பியவர்கள் இவர்கள்.

விடுதலை ஒன்றே இலட்சியமாய் –

சுதந்திர ஈழமே தம் மூச்சாய்

வாழ்ந்து, களமாடி

விதையாகிப் போன

மாவீரர்கள், மக்கள்

அனைவரையும்

இந்த நாளில் நினைவு கூருகிறோம்.

– புதினப்பலகை குழுமத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *