ஜப்பானிய அரசின் உயர்மட்டக் குழு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆய்வு
ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று அண்மையில் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்தக் குழுவினரை அம்பாந்தோட்டை துறைமுகத்தை முகாமைத்துவம் செய்யும், அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக குழும அதிகாரிகள் வரவேற்றனர்.
ஜப்பானிய கடற்படைக் கப்பலான, அகிபோனோ கடந்த ஏப்ரல் 9ஆம் நாள் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு மேற்கொண்ட பயணத்தின் தொடர்ச்சியாகவே ஜப்பானிய குழு இந்தப் பயணத்தை மேற்கொண்டது.
ஜப்பானிய குழுவினர், அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக குழுமத்தின் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்ததுடன், துறைமுகம் குறித்த விரிவான ஆய்விலும் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுக்கள் பல மணிநேரம் நீடித்ததாக கூறப்படுகிறது.
ஜப்பானிய குழுவில், கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்தைச் சேர்ந்த கப்டன் அட்சுஹிரோ மோரோ, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சின் தென்மேற்கு ஆசிய பிரிவுக்கான பணிப்பாளர் ஷோகோ யொஷிடேகி, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரி யுசுகி ரனாகா, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி, அட்சுகி சுஜிஹாரா, ஜப்பானிய கடலோரக் காவல் படையைச் சேர்ந்த ரோரு கொடமா ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.