மேலும்

சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளில் திருப்தியில்லை – கொமன்வெல்த் செயலரிடம் சம்பந்தன்

சிறிலங்காவில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், மக்கள் மத்தியில் முழுமையான அமைதியும், சமாதானமும் ஏற்படவில்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, கொமன்வெல்த் செயலாளர் நாயகம், பற்றீசியா ஸ்கொட்லன்ட் இன்று எதிர்க்கட்சித் தலைவரின் பணியகத்தில் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன்,

“புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும், மக்கள் குறிப்பாக, சிறுபான்மை மக்கள் மத்தியில், பாரிய எதிர்பார்ப்புகள் காணப்பட்டன.

அரசாங்கம், சர்வதேச மட்டத்திலும் நாட்டு மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமென அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

பிராந்தியங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில், அரசாங்கக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு புதிய அரசியல் யாப்பு, உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுதல், நட்டஈடு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள், படையினர் கைவசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு, மிகக் கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விடுதலை போன்றன, அவ்வாறான வாக்குறுதிகளில் சிலவாகும்.

எனினும் இவை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை.

புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதிலும் இத்தகைய நிலையே காணப்படுகிறது.

புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் பிரேரணையானது, நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஒரு சில அரசியல் காரணங்களினால்,  இதனை முன்னெடுத்துச் செல்வதில் அரசாங்கத் தரப்பில் தாமதங்கள் காணப்படுகின்றன.

இந்த நாடு பாரிய யுத்தம் ஒன்றுக்கு முகம் கொடுத்தமைக்குக் காரணங்கள் உள்ளன.  ஒருவர் உறுதியாக இல்லாதவிடத்து, இப்பிரச்சினையைக் கையாள முடியாது.

கடும் போக்காளர்களின் நடவடிக்கைகளுக்கு அஞ்சி, இவற்றை ஒருவர் கைவிட முடியாது.

அரசாங்கமானது, உறுதியாக நின்று நாட்டைச் சரியான பாதையில் நடத்த வேண்டும்.

மேலும் புதிய அரசியல் யாப்பின் உருவாக்கமானது, நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்லும் மிகப்பாரிய ஒரு கருமமாகும்.

இந்த நாட்டில், நிரந்தரமான அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு, எனது முழுமையான பங்களிப்பு இருக்கும்.

கொமன்வெல்த் உள்ளடங்கலான சர்வதேச சமூகத்துக்கும் சிறிலங்காவில் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டுவதில் பங்குண்டு” என்றும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட கொமன்வெல்த் அமைப்பின் செயலர், சிறிலங்காவில் ஜனநாயக மேம்பாடு, சட்ட ஒழுங்கு, நல்லாட்சி மற்றும் சூழல் மாசடைதலைத் தவிர்த்தல் உள்ளடங்கலான பல விடயங்களில், கொமன்வெல்த் செயலகம் பங்களிப்பு வழங்குகிறது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கும் கொமன்வெல்த் பணியகம், தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கும்.

மிதமான தமது செயல்களின் மூலம், சமாதானத்துக்கான ஒரு தூதுவராக, இரா.சம்பந்தன் இருக்கிறார்” என்றும் குறிப்பிட்டார்.

ஒரு கருத்து “சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளில் திருப்தியில்லை – கொமன்வெல்த் செயலரிடம் சம்பந்தன்”

  1. மனா‌ே says:

    இ‌வ‌ை எல்லாம் உத்திய‌‌ோக ரீதியான கூட்டறிக்க‌ையாக உறுதிப் படுத்தினால்அல்லாமல் உண்‌ம‌ைச் ச‌ெய்தியாக எற்கமுடியாது.‌த‌ேர்தல் பிரச்சாரமாகவ‌ே இச்ச‌ெய்தி த‌ெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *