16 ஆண்டுகளுக்குப் பின்னர் மோசமான நிலையில் சிறிலங்காவின் பொருளாதாரம்
16 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டில் மிகக் குறைந்த நிலை பதிவாகியுள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கியின் ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்கா மத்திய வங்கியின் 2017ஆம் ஆண்டுக்கான அறிக்கை கடந்தவாரம் வெளியிடப்பட்டது. அதில், 2017ஆம் ஆண்டில் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 3.1 வீதமாக இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டில் 3.6 வீத பொருளாதார வளர்ச்சியை சிறிலங்கா மத்திய வங்கி எதிர்பார்த்திருந்தது. எனினும், கடுமையான வரட்சி, இயற்கைப் பேரழிவுகளால் விவசாயம் மற்றும் தொழில்துறைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளால், பொருளாதார வளர்ச்சி மந்தமானது.
2001 ஆண்டுக்குப் பின்னர், மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி பதிவாகியது, 2017ஆம் ஆண்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
2001ஆம் ஆண்டு, போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி விமானங்களை அழித்ததாலும், சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டதாலும், பொருளாதார வளர்ச்சி மோசமான நிலையில் இருந்தது.