சுதந்திரக் கட்சி குத்துக்கரணம் – வாக்கெடுப்பில் பங்கேற்காது என்ற அறிவிப்பு
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பங்கேற்காது என்று அறிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.எச்.எம்.பௌசி இந்த முடிவை அறிவித்துள்ளார்.
பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டும் என்றும், இல்லையேல், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி எச்சரித்து வந்தது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஆதரவை வெளிப்படுத்திய நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று காலை திடீரென குத்துக்கரணம் அடித்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த முடிவினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவின்றியே நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது.
அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிபர் செயலகத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடனும், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும், தீவிர பேச்சுக்களை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.