உச்சக்கட்ட பரபரப்பில் கொழும்பு அரசியல் – கூட்டமைப்பு மீது குவியும் பார்வை
சிறிலங்கா அரசியலில் உச்சக்கட்ட பரப்பரப்பு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அனைத்து தரப்பினதும் கவனமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது ஒன்று குவிந்துள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்றிரவு நடைபெறவுள்ளது.
இந்த வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவளிப்பதா – எதிர்ப்பதா என்று ஏனைய கட்சிகள் அனைத்தும் முடிவுகளை எடுத்து விட்ட போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்றுக்காலையும் மாலையும் இதுபற்றி ஆராய்ந்தது. இதன் போது கடுமையான வாதப் பி்ரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன் உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது.
அதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பின் போது நடுநிலை வகிக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பு உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதனால், இன்று காலை 10 மணியளவில் மீண்டும் கூடி ஆராய்ந்து, இறுதியான முடிவை எடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளனர் என்று ஐதேக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.