நம்பிக்கையில்லா பிரேரணை – ஏப்ரல் 2இல் கூட்டமைப்பின் முடிவு
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் நாளே முடிவு செய்யப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் நாள், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
இதுகுறித்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்,
“ கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் நாள் நடக்கவுள்ளது. அந்தக் கூட்டத்தில் கட்சியின் முடிவு எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்கள் உள்ள போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தற்போது, கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.