சமூக ஊடகங்கள் மீதான தடைநீடிப்பு – திங்கட்கிழமைக்குப் பின்னரே முடிவு
சிறிலங்காவில் சமூக வலைத்தள ஊடகங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டுப்பாடு, தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
சமூக வன்முறைகள் தூண்டப்படுவதாக எழுந்து குற்றச்சாட்டை அடுத்து, முகநூல், கீச்சகம், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் தற்காலிக தடையை விதித்திருந்தது.
இந்த தடை இன்று நீக்கப்படும் என்று நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தார்.
எனினும், இந்தக் கட்டுப்பாடு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், வரும் திங்கட்கிழமை நடத்தப்படவுள்ள பாதுகாப்பு நிலை குறித்த மீளாய்வுக் கூட்டத்தின் பின்னரே, தடையை நீக்குவது பற்றிய முடிவு எடுக்கப்படும் என்றும் தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.