நிதி அதிகாரங்களை ஐதேகவிடம் இருந்து பறிக்கிறார் மைத்திரி
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஐதேகவினால் கையாளப்பட்டு வந்த தேசிய பொருளாதாரத்தை, தம்வசம் எடுத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கேகாலையில் நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,
“ கடந்த மூன்று ஆண்டுகளாக பொருளாதாரம் கடுமையான அழுத்தங்களுக்குக் கீழ் உள்ளது. இந்த ஆண்டில் இருந்து, தேசிய பொருளாதார முகாமைத்துவத்துக்கு நான் தலைமையேற்பேன்.
வாழ்க்கைச் செலவைக் குறைப்பது மற்றும்உள்நாட்டு முதலீட்டாளர்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்படும்.
உள்நாட்டு முதலீட்டாளர்கள் தமது நிதியை, வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லாமல், இங்கேயே முதலிட வேண்டும். அவர்களுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும்.
மத்தியவங்கி பிணைமுறி மோசடியில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இப்போது தமது கைகளில் உள்ள கறைகளைக் கழுவிக் கொள்ள முனைகின்றனர்.
இதற்கு யார் பொறுப்பானர்வர்கள் என்பதை நாடே அறியும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர், நிதியமைச்சின் அதிகாரங்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது கைக்குள் கொண்டு வரக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.