2021ஆம் ஆண்டு வரை பதவியில் நீடிக்க முடியுமா?- உச்சநீதிமன்றிடம் விளக்கம் கோரினார் மைத்திரி
தாம் 2021ஆம் ஆண்டு வரை பதவியில் நீடிக்க முடியுமா என்பதை தெளிவுபடுத்துமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.
சிறிலங்கா அதிபராக 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்ட போது, நடைமுறையில் இருந்த அரசியலமைப்பின்படி, அதிபர் ஒருவரின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாக இருந்தது.
எனினும், மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம், சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம், 5 ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டது.
இந்தநிலையிலேயே, தமது பதவிக்காலம் 19ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய 5 ஆண்டுகளில் – அதாவது 2020ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறதா அல்லது, தாம் தெரிவு செய்யப்பட்ட போது நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு விதிகளுக்கு அமைய, ஆறு ஆண்டுகள்- அதாவது 2021 ஆண்டு வரை பதவியில் தொடர முடியுமா என்று விளக்கமளிக்குமாறே உச்சநீதிமன்றிடம் சிறிலங்கா அதிபர் விளக்கம் கோரியுள்ளார்.
எதிர்வரும் 14ஆம் நாளுக்குள் இதுபற்றி தமக்கு அறிவிக்குமாறும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரியிருந்தார்.
இதற்கமைய, நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான திறந்த அமர்வில் இது தொடர்பாக வாதம் இடம்பெறவுள்ளது.
இதன் பின்னர், சிறிலங்கா அதிபருக்கு தமது வியாக்கியானத்தை உச்சநீதிமன்றம் அனுப்பி வைக்கும்.