வடக்கின் நான்கு மாவட்டங்களில் கட்டுப்பணம் செலுத்தியது கூட்டமைப்பு
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நான்கு மாவட்டங்களில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
முதற்கட்டமாக தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக அறிவிப்பு வெளியிடப்பட்ட 248 உள்ளூராட்சி சபைகளுக்கும் கட்டுப்பணம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
இதற்கமைய, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ளூராட்சி சபைகளுக்குப் போட்டியிடுவத்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
யாழ். மாவட்டத்தில் உள்ள 16 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காக தமிழ் அரசுக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இன்று யாழ். மாவட்டச் செயலகத்தில் கட்டுப்பணத்தை, செலுத்தினார்.
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் செலுத்தப்பட்டது.
வவுனியா மாவட்டத்தில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கட்டுப்பணத்தைச் செலுத்தினார்.
மன்னார் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கட்டுப்பணம் செலுத்தினார்.