அரசியல் கைதிகளின் குடும்பத்தினரை வெறும் கையுடன் திருப்பி அனுப்பினார் சிறிலங்கா அதிபர்
சட்டமா அதிபரும், நீதி அமைச்சரும் வெளிநாடு சென்றிருப்பதால், அடுத்தவாரம் நாடு திரும்பிய பின்னர், அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து அவர்களுடன் கலந்துரையாடுவதாகக் கூறி, அரசியல் கைதிகளின் குடும்பத்தினரையும், தமிழ் அரசியல்பிரமுகர்களையும் சிறிலங்கா அதிபர் வெறும் கையுடன் திருப்பி அனுப்பியுள்ளார்.
தமது வழக்குகளை மீண்டும் வவுனியா நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினருடன், வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்டோர் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இந்தச் சந்திப்பின் போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் வழக்குகளை மீண்டும் வவுனியாவுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை விடுத்தனர்.
இதற்குப் பதிலளித்த சிறிலங்கா அதிபர், சட்டமா அதிபரும், நீதி அமைச்சரும் வெளிநாடு சென்றிருப்பதால், அடுத்தவாரம் நாடு திரும்பிய பின்னர், அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து அவர்களுடன் கலந்துரையாடுவதாகக் கூறி, வெறும் கையுடன் அனுப்பி வைத்துள்ளார்.
அதேவேளை, யாழ். பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் நேற்று சிறிலங்கா அதிபரைச் சந்தித்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியிருந்தனர்.
அவர்களுக்கும் சிறிலங்கா அதிபர் தெளிவான எந்தப் பதிலையும் அளிக்கவில்லை என்று அறியப்படுகிறது.