இந்திய- சிறிலங்கா அமைச்சர்கள் மட்ட பேச்சில் சுமந்திரனும் பங்கேற்பு
மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக, இந்திய- சிறிலங்கா அமைச்சர்கள் மட்டப் பேச்சுக்கள் நேற்று புதுடெல்லியில் இடம்பெற்றன.
புதுடெல்லியில் நேற்றுமுன்தினம் நடந்த மீன்பிடி தொடர்பான மூன்றாவது கூட்டுக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, நேற்று இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன.
இந்தியத் தரப்பில் விவசாய மற்றும் விவசாயிகள் நலன்புரி அமைச்சர் ராதா மோகன் சிங் தலைமையிலான குழுவும், சிறிலங்கா தரப்பில் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையிலான குழுவும் பேச்சுக்களில் பங்கேற்றது.
இந்தப் பேச்சுக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.
மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் விவகாரம், ஆழகடல் மீன்பிடிக்கு மீனவர்களைத் தயார்படுத்தல், கடலடி மடிவலைகளைத் தடைசெய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது, விரிவாகப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.