2018 வரவுசெலவுத் திட்டத்தில் 1,813 பில்லியன் ரூபா பற்றாக்குறை – இன்று நிதி ஒதுக்கீட்டு பிரேரணை
2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா நிதியமைச்சு அறிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டுக்கான அரசாங்க செலவினம் 3, 982 பில்லியன் ரூபாவாக இருக்கும் என்றும், எதிர்பார்க்கப்படும் வருமானம், 2, 175 பில்லியன் ரூபாவாக இருக்கும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 2017ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட செலவினங்களை விட, (1, 819 பில்லியன் ரூபா) , 2018ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் அரச செலவினம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
அதேவேளை எதிர்பார்க்கப்படும் அரச வருமானமும் அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டு 1, 978 பில்லியன் ரூபாவாக எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானம், 2018ஆம் ஆண்டு 2, 175 பில்லியன் ரூபாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், பற்றாக்குறை 1,813 பில்லியன் ரூபாவாகும்.
இன்று நாடாளுமன்றத்தில் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுப் பிரேரணையை நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன சமர்ப்பிப்பார்.
இது 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் முதலாவது வாசிப்பாக கருதப்படும். இதன் இரண்டாவது வாசிப்பு, வரும் நொவம்பர் 9ஆம் நாள் இடம்பெறும்.
அன்றைய நாள், நிதியமைச்சர் மங்கள சமரவீர, அரச வருமான மூலங்கள் மற்றும் செலவினங்கள் தொடர்பாகவும், பற்றாக்குறையை ஈடு செய்யும் வழிமுறைகள் தொடர்பாகவும் விளக்கமளிப்பார்.