கொழும்பில் கைது செய்யப்பட்ட ஆவா குழுத் தலைவரிடம் யாழ்ப்பாணத்தில் விசாரணை
கொழும்பில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஆவா குழுத் தலைவர் என்று கூறப்படும், விக்டர் நிசா எனப்படும் நிசாந்தன் மற்றும் அவரது இரண்டு சகாக்களும் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புறக்கோட்டை மற்றும் மட்டக்குளி பகுதிகளில் வைத்து ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் நான்கு பேரை சிறிலங்கா காவல்துறையினர் நேற்றுமுன்தினம் கைது செய்திருந்தனர்.
இவர்களில் ஆவா குழுத் தலைவர் என்று கூறப்படும், விக்டர் நிசா எனப்படும் சத்தியவேல் நாதன் நிசாந்தன் மற்றும் அவரது இரண்டு சகாக்கள் விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர் விசாரணைகளின் ஆரம்பத்தில் கடந்த வாரங்களில் யாழ்ப்பாணத்தில் தமது குழுவினரால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான விபரங்களை வெளியிடாமல் இருப்பதற்கு முயற்சி செய்ததாகவும் காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜூலை இரண்டாம் வாரம் தொடக்கம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட தேடுதல்களில் 50 பேர் வரை கைது செய்யப்பட்டனர், அவர்களில் 27 பேர் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.