புதுடெல்லியில் பௌத்த விகாரை, கலாசார நிலையம் அமைக்க சிறிலங்கா திட்டம்
புதுடெல்லியில் விகாரை ஒன்றையும், சிறிலங்கா கலாசார நிலையம் ஒன்றையும் அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களுக்கும், தேவையான காணிகளை வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடம் சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.
தாது கோபம் மற்றும் பௌத்த விகாரை ஆகியவற்றை அமைப்பது முதலாவது திட்டமாகும். இரண்டாவது திட்டத்தின் கீழ் சிறிலங்கா கலாசார நிலையம் அமைக்கப்படவுள்ளது.
அத்துடன், புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், சிங்கள மொழி போதனைப் பிரிவு ஒன்றை ஆரம்பிக்கவும் சிறிலங்கா அரசாங்கம் உதவி வழங்கவுள்ளது.
அண்மையில் வெசாக்கை முன்னிட்டு புதுடெல்லியில் , சிறிலங்கா தூதரகத்தினால், பாரிய அலங்கார வளைவு மற்றும் பந்தல் என்பன அமைக்கப்பட்டன. இதற்காக சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த குழுவொன்று புதுடெல்லி சென்றிருந்தது.