பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தல் – தொழிற்கட்சி முன்னணியில்
பிரித்தானியாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி கூடுதல் ஆசனங்களைப் பெறும், என்று தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் கூறியிருந்தாலும், தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் தொழிற்கட்சியே முன்னணியில் உள்ளது.
650 உறுப்பினர்களைக் கொண்ட பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில், இதுவரை வெளியாகியுள்ள 308 தொகுதிகளுக்கான முடிவுகளில், தொழிற்கட்சி, 146 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 125 ஆசனங்களுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறது. ஸ்கொட்டிஸ் தேசிய கட்சி 21 ஆசனங்களைப் பெற்றிருக்கிறது.
வாக்களிப்புக்குப் பின்னர் வெளியாகிய கருத்துக் கணிப்புகள், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்பதை வெளிப்படுத்தியிருந்தன.
அதன்படி கன்சர்வேட்டிவ் கட்சியே, 314 ஆசனங்களுடன் மிகப் பெரிய கட்சியாக விளங்கும் என்றும், தொழிற்கட்சி, 266 ஆசனங்களைக் கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன.
எனினும், கருத்துக்கணிப்புகளுக்கும் மாறாகவே இதுவரை வெளியான முடிவுகள் அமைந்திருக்கின்றன. இப்போதைய கணிப்புகளின் படி தொழிற்கட்சி 322 ஆசனங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், பிரித்தானியாவில் பெரும்பான்மை பலம் பெற்ற அரசு அமையுமா என்பதில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.