அம்பாந்தோட்டை துறைமுக குத்தகைக் காலத்தைக் குறைக்க சிறிலங்கா அரசு முயற்சி
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகைக் காலம் தொடர்பாக சின நிறுவனத்துடன் மீள்பேச்சுக்களை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக, சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஜப்பான் சென்றுள்ள அமைச்சர் மலிக் சமரவிக்கிரம நேற்று ரோக்கியோவில் வர்த்தக கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டார்.
அங்கு ஜப்பானிய ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மலிக் சமரவிக்கிரம,
“அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு தொடர்பான இறுதிக்கட்ட செயல்முறைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த உடன்பாட்டை இறுதி செய்ய முடியும் என்று நம்புகிறோம். குத்தகைக்காலத்தை 99 ஆண்டுகளில் இருந்து குறைப்பதற்கு சீன நிறுவனத்திடம் கேட்டுள்ளோம். இது தொடர்பாக மீள் பேச்சுக்கள் நடத்தப்படும் ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.