சிறிலங்காவுக்கு 42 மில்லியன் யூரோவை வழங்குகிறது ஐரோப்பிய ஒன்றியம்
சிறிலங்காவின் விவசாயத் துறையை நவீன மயப்படுத்தவதற்கும், நல்லிணக்க செயல்முறைகளை வலுப்படுத்துவதற்கும், 42 மில்லியன் யூரோவை ஐரோப்பிய ஒன்றியம் உதவியாக வழங்க முன்வந்துள்ளது.
இது தொடர்பாக சிறிலங்காவின் நிதியமைச்சர் செயலர் சமரதுங்கவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான தூதுவர் டங் லாய் மார்கேயுக்கும் இடையில் கடந்த ஏப்ரல் 6ஆம் நாள் உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதன்படி, இரண்டு திட்டங்களுக்காக 42 மில்லியன் யூரோவை (6791.4 மில்லியன் ரூபா) ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவுள்ளது.
இதில். விவசாயத்துறையை நவீன மயப்படுத்துவதற்கு 30 மில்லியன் யூரோவும், நல்லிணக்க செயல்முறையை வலுப்படுத்துவதற்கு 12 மில்லியன் யூரோவும் ஒதுக்கப்படவுள்ளது.
அதேவேளை, ஜேர்மனியின் சமஷ்டி வெளிவிவகாரப் பணியகம் 2.4 மில்லியன் யூரோவையும், பிரிட்டிஷ் கவுன்சில் 0.1 மில்லியன் யூரோவையும் நல்லிணக்கத் திட்டங்களுக்காக பங்களிப்பு செய்யவுள்ளன.