அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டில் மேலும் திருத்தங்கள் செய்ய முயற்சி
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாட்டில் மேலும் பல திருத்தங்கள் முன்வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத பங்குகளை, 99 ஆண்டு குத்தகைக்கு சீன நிறுவனத்துக்கு வழங்க சிறிலங்கா அரசாங்கம் இணங்கியிருந்தது.
எனினும், நீண்ட காலத்துக்கு, அதிகளவு பங்குகளை சீன நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அரசாங்கத்துக்குள் எதிர்ப்புகள் தோன்றியுள்ளன. இதனால் இந்த உடன்பாடு கையெழுத்திடப்படுவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மூன்று பேர் கொண்ட அமைச்சரவை உபகுழு இதுதொடர்பான உடன்பாட்டை மீளாய்வு செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
குத்தகைக் காலத்தை 99 ஆண்டுகளில் இருந்து 50 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என்று முக்கியமானதொரு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், குத்தகைக் காலத்தை 50 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.
துறைமுகத்துக்கு சிறிலங்கா கடற்படையே பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், அஙகு சிறிலங்கா கடற்படைத் தளம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் ஒரு திருத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மூல வரைவின் படி, 80 வீத பங்குகளை வழங்குததற்குப் பதிலாக, 60 வீத பங்குகளையே சீன நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த யோசனைகள் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.