மேலும்

மூன்று மாதங்களுக்குப் பின் இன்று வழமைக்குத் திரும்புகிறது கட்டுநாயக்க விமான நிலையம்

airportகட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் விரிவாக்கப்பட்ட ஓடுபாதை இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களாக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த விமான நிலையம் வழமைக்குத் திரும்பவுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையை 50 மில்லியன் டொலர் செலவில் விரிவாக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டன. இதற்காக காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.

தற்போது, விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முடிவடைந்துள்ளதையடுத்து, இன்று தொடக்கம் விமான சேவைகள் வழமைக்குத் திரும்பவுள்ளன.

விரிவுபடுத்தப்பட்ட ஓடுபாதையில்,  திருவனந்தபுரத்தில் இருந்து வரும் யுஎஸ்-1162 விமானம் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் முதலாவதாக தரையிறங்கும்.

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏ-380 விமானங்கள் தரையிறங்க வசதியாக, ஓடுபாதை 60 மீற்றரில் இருந்து 75 மீற்றராக விரிவாக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையம் முழு அளவில் செயற்படத் தொடங்கவுள்ள நிலையில், நாளை முதல் தமது சேவைகள் வழமைபோல இடம்பெறும் என்றும், பயணிகள், மூன்று மணிநேரத்துக்கு முன்னதாக விமான நிலையத்துக்கு வந்தால் போதுமானது என்றும் சிறிலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *