இந்தியப் பெருங்கடல் மீது கவனம் செலுத்தும் ஜேர்மனி – தூதுவர்களுக்கான கூட்டம் சிறிலங்காவில்
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை, புதிய மூலோபாய மற்றும் இராஜதந்திர முன்னுரிமைக்குரிய பகுதியாக கருதி, ஜேர்மனி தனது நாட்டு தூதுவர்களுக்கான கூட்டம் ஒன்றை முதல் முறையாக சிறிலங்காவில் ஒழுங்கு செய்துள்ளது.
இன்று இந்தக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளதாக ஜேர்மனியின் இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பிராந்தியத்தை வடிவமைப்பதில் உலகளாவிய போட்டி நிலவுகிறது. பெர்லின் ஒரு பிரதான வணிக சக்தி என்ற வகையில், இந்தியப் பெருங்கடலில் உறுதிப்பாட்டையும், சட்டத்தையும் உறுதிப்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளது என்று மூத்த ஜேர்மன் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
புவிசார் அரசியலில் இந்தியப் பெருங்கடல் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம் என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதனைக் கவனத்தில் கொண்டு ஜேர்மனி வெளிவிவகார அமைச்சு தமது நாட்டு தூதுவர்களுக்கான கூட்டம் ஒன்றை சிறிலங்காவில் இன்று தொடக்கம் நடத்தவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் இந்தப் பிராந்தியத்திலுள்ள நாடுகளில் பணியாற்றும் ஜேர்மனி தூதுவர்களுடன், மொஸ்கோ மற்றும் பீஜிங்கில் உள்ள தூதுவர்களும் கலந்து கொள்கின்றனர்.
ஜேர்மனியின் இராஜதந்திரிகள் மத்தியில் உரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ள வெளியகப் பேச்சாளர்களில், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கரும் உள்ளடங்கியுள்ளார்.