விசாரணைகளில் இருந்து இராணுவத்துக்கு விலக்கு அளிக்க முடியாது – சிறிலங்கா காவல்துறை
சர்ச்சைக்குரிய விசாரணைகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினருக்கு விலக்கு அளிக்க முடியாது என்று சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
பல உயர் மட்ட வழக்குகளில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரை இலக்கு வைத்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொள்வதாக கூட்டு எதிரணியினர் குற்றம்சாட்டியிருந்தனர்.
இதனை நிராகரித்துள்ள சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர், விசாரணைகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினருக்கு விலக்கு அளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
பல்வேறு காரணங்களால் தாமதிக்கப்பட்டு வந்த ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கு, ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட வழக்கு, வசீம் தாஜுதீன் கொலை வழக்கு, ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்ட வழக்கு விசாரணைகள் தற்போது தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
மேற்படி சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில், பல இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.