16 மாதங்களில் சிறிலங்கா கடற்படை ஈட்டியுள்ள 3 பில்லியன் ரூபா வருமானம்
கடந்த 16 மாதங்களில் வணிகக் கப்பல்களுக்கு அளித்து வந்த பாதுகாப்புச் சேவையின் மூலம், சிறிலங்கா கடற்படை, 3 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளது. காலியில் உள்ள நிலையத்தில் இருந்தே இந்த வருமானம் பெறப்பட்டுள்ளது.
சிறிலங்காவை அண்டிய கடற்பரப்பு வழியாகப் பயணம் மேற்கொள்ளும் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்புச் சேவைகளை வழங்கியதன் மூலம் இந்த வருமானம் ஈடுடப்பட்டுள்ளது.
முன்னர் அவன்ட் கார்ட் நிறுவனத்தினால் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், இந்த பாதுகாப்பு சேவை சிறிலங்கா கடற்படையிடம், கடந்த 2015நொவம்பர் மாத நடுப்பகுதியில் கையளிக்கப்பட்டது.
இதற்குப் பின்னர், காலி செயற்பாட்டு நிலையத்தின் ஊடாக பாதுகாப்பு சேவையை பெற்று பயணத்தை மேற்கொண்டிருந்த 8,181 கப்பல்களின் மூலம், 3,111,250,178.60 வருமானம் பெறப்பட்டுள்ளது.
வணிகக் கப்பல்களில் பணியில் ஈடுபட்டிருக்கும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பாதுகாப்புக் குழுக்களுக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை சிறிலங்கா கடற்படை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.