வெலிவேரிய துப்பாக்கிச் சூடு – மூன்று சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கைது
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வெலிவேரிய, ரதுபஸ்வெலவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேர் கொல்லப்படவும், 30 பேர் காயமடையவும் காரணமாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1ம் நாள் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, வாக்குமூலம் அளிப்பதற்காக சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஸ்ராவ் சார்ஜன்ட் சிறிசேன, கோப்ரல் லலித்கே, கோப்ரல் திலகரத்ன ஆகியோர் நேற்றுக்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அங்கு நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து மூன்று இராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு, கம்பகா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். இதையடுத்து மூவரையும், ஏப்ரல் 3ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, இந்தச் சம்பவத்தின் போது, இராணுவத்தினருக்கு சுடுமாறு உத்தரவிட்ட பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன உள்ளிட்ட உயர் அதிகாரிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.