உலங்கு வானூர்தி பராமரிப்பு நிலையத்தை சிறிலங்காவில் அமைக்க ரஷ்யா திட்டம்
சிறிலங்காவில் பயன்படுத்தப்படும் ரஷ்யத் தயாரிப்பு உலங்கு வானூர்திகளின், பராமரிப்பு சேவை நிலையம் ஒன்றை சிறிலங்காவில் அமைப்பதற்கான யோசனையை ரஷ்யா முன்மொழிந்துள்ளது.
இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ரஷ்யாவின் சமஷ்டி சேவை பிரதித் தலைவர் மிகெய்ல் பெருக்கோவ் இந்த முன்மொழிவைச் செய்துள்ளதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசியாவில் நடைபெறும் லிமா-2017 இராணுவ கண்காட்சியில் பங்கேற்றுள்ள இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ரஷ்யாவின் சமஷ்டி சேவை பிரதித் தலைவர் மிகெய்ல் பெருக்கோவ் இதுதொடர்பாக தகவல் வெளியிடுகையில், உலங்குவானூர்தி பராமரிப்பு சேவை நிலையம் ஒன்றை அமைப்பதற்கான திட்டத்தையும், கவசவாகனங்களுக்கான உதிரிப்பாகங்களை வழங்குவதற்கான திட்டம் ஒன்றையும் சிறிலங்காவிடம் சமர்ப்பித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் 12, எம்.ஐ-8, மற்றும் எம்ஐ-17 போக்குவரத்து உலங்குவானூர்திகள், 6, எம்,ஐ-24 பி தாக்குதல் உலங்குவானூர்திகள், மற்றும் 36, பிஎம்பி- காலாட்படை சண்டை வாகனங்கள், மற்றும் 50, பிரிஆர்-80 துருப்புக்காவி கவசவாகனங்கள் என்பன தற்போது பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.