தீர்மான வரைவு குறித்து இந்தியாவுடனும் ஆலோசனை
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள தீர்மான வரைவு குறித்து இந்தியாவுடனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 05ஆம் நாள்) அனுசரணை நாடுகளால் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தீர்மான வரைவு கையளிக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில், அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப், பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர். இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுடனும், வரைவு குறித்துக் கலந்தாலோசனை நடத்தப்பட்டது.
இந்தோனேசியாவில் இருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தொலைபேசி மூலம் தொடர்ச்சியாக இந்த கலந்துரையாடல்களில் பங்கேற்றார். பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவே இந்த விவகாரங்களைக் கையாண்டார்.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை மாலை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தீர்மான வரைவுக்கு இணை அனுசரணை வழங்குவதற்கான ஒப்புதலைப் பெற்றார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.