மேலும்

கட்டுநாயக்க விமான நிலைய புறப்படுகைப் பகுதிக்குள் விருந்தினர்களுக்கு தடை

airportகட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளுடன் வரும் விருந்தினர்கள், புறப்படுகை பிரதேசத்துக்குள் வரும் ஜனவரி 6ஆம் நாள் தொடக்கம் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை புனரமைப்புப் பணிகள் வரும் ஜனவரி 6ஆம் நாள் தொடக்கம், ஏப்ரல் 5ஆம் நாள் வரையான மூன்று மாதங்களுக்கு இடம்பெறவுள்ளது.

இந்த மூன்று மாத காலப்பகுதியில், காலை 8.30 மணி தொடக்கம், மாலை 4.30 மணி வரையான எட்டு மணித்தியாலங்கள் விமான நிலையத்தின் ஊடான அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படவுள்ளன.

இதனால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்கவே புறப்படுகைப் பகுதிக்கு விருந்தினர்களை அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பயணிகளுக்கு ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள் விமான நிலையத்துக்குள் செய்யப்பட்டுள்ளன.

குறைந்தது நான்கு மணிநேரம் முன்னதாகவே பயணிகளை விமான நிலையத்துக்கு வருமாறும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *