5.7 ஏக்கரில் விரிவாக்கப்படுகிறது கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக வளாகம்
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதரகம் புதிதாக 5.7 ஏக்கர் நிலத்தில் விரிவாக கட்டப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று அமெரிக்கத் தூதரக வளாகத்தில் இடம்பெற்றது.
தற்போதுள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஒட்டியதாக வாங்கப்பட்ட காணியை உள்ளடக்கியதாக பாரிய தூதரக கட்டடத் தொகுதியை அமெரிக்கா அமைக்கவுள்ளது.
வொசிங்டனில் இருந்து வந்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், கடல்கடந்த நிர்மாண செயற்பாடுகள் பிரிவின் முதன்மைப் பிரதிப்பணிப்பாளர் வில்லியம் மோசர் மற்றும் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் மற்றும் அதிகாரிகள் நேற்று நடந்த ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றனர்.
தற்போதுள்ள கட்டடத்தொகுதியை உள்ளடக்கியதாக, புதிதாக அமைக்கப்படவுள்ள தூதரக வளாகம், தூதரகப் பணியகம், மரைன் காவல்படைக்கான வதிவிடம், உதவி கட்டடங்கள், மற்றும் தூதுரக சமூகத்துக்கான வசதிகளைக் கொண்டதாக இருக்கும்.
இந்த புதிய தூதரக வளாகம், தூதரகப் பணியாளர்களின் பாதுகாப்பான, நிலையான, உறுதித்தன்மையான, நவீன பணியிடமாக இருக்கும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வொசிங்டனில் உள்ள நிறுவனம் ஒன்றினால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தூதரக வளாகத் தொகுதியின் கட்டுமானப் பணிகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றே மேற்கொள்ளவுள்ளது.