அமெரிக்காவின் பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரிஸ் சிறிலங்கா பிரதமருடன் பேச்சு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடத்தின் தளபதி, அட்மிரல் ஹரி ஹரிஸ், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.
கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ள, கடல்சார் பாதுகாப்பு மாநாடான, காலி கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடத்தின் தளபதி, அட்மிரல் ஹரி ஹரிஸ், நேற்று கொழும்பு வந்தார்.
அவருடன், பாதுகாப்புக் கற்கைகளுக்கான ஆசிய பசுபிக் மையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஹார்ட்செல்லும் சிறிலங்கா வந்துள்ளார்.
சிறிலங்காவுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டுள்ள பசுபிக் கட்டளை பீடத்தின் தளபதி, அட்மிரல் ஹரி ஹரிஸ் மற்றும் மேஜர் ஜெனரல் ஹார்ட்செல் ஆகியோரை சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், விமான நிலையத்தில் வரவேற்றார்.
அதன் பின்னர், அலரி மாளிகையில், அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளது.
அதேவேளை, அட்மிரல் ஹரி ஹரிசுக்கு நேற்றிரவு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இராப்போசன விருந்து அளித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.