அதிரடிப்படை முன்னாள் கட்டளைத் தளபதி கைது – சிறிலங்கா அதிபர் அதிருப்தி
சிறிலங்கா காவல்துறை சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் கே.எல்.என்.சரத்சந்திர கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
காவல்துறை வாகனத்தை தவறாகப் பயன்படுத்தி, அரசாங்கத்துக்கு 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில், சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு. எதிர்வரும் டிசெம்பர் 6ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா காவல்துறை மா அதிபரின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்தே இவர் கைது செய்யப்பட்டார்.
சிறப்பு அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் செய்த முறைப்பாட்டின் பேரிலேயே, காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.
இந்தக் கைது தொடர்பாக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவிடம் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
காவல்துறைத் திணைக்களத்தில் பல்வேறு பாரிய முறைகேடுகள் இருந்த போதிலும்,ஓய்வுபெற்ற இந்த அதிகாரி மாத்திரம் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது ஏன் என்று காவல்துறை மா அதிபரிடம், சிறிலங்கா அதிபர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்கான இந்த சம்பவம் இடம்பெற்றதா என்று தாம் அறிய விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இந்தக் கைது தொடர்பாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாலக ரத்நாயக்கவும் அறிந்திருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.