மகிந்தவின் சீனப் பயணம் – சீன வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியாதாம்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச சீனாவுக்கு மேற்கொண்டுள்ள பயணம் தொடர்பாக, தாம் எதையும் அறியவில்லை என்று சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஒரு வாரகாலப் பயணமாக மகிந்த ராஜபக்ச சீனா சென்றுள்ளார்.
கடந்த 23ஆம் நாள் மகிந்த ராஜபக்ச சீனாவுக்குப் புறப்பட முன்னர், அவரது செயலகம் வெளியிட்ட அறிக்கையில், சீன அரசின் அழைப்பின் பேரிலேயே பீஜிங் செல்வதாகவும், வரும் 28ஆம் நாள் சீன அரச தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பீஜிங்கில் நேற்று நடத்திய நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், ஜெங் சுவாங்கிடம், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் பயணத்தில் சீனா எதனை எதிர்பார்க்கிறது? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், ஜெங் சுவாங், ‘அதுபற்றி நான் அறியவில்லை. இதுகுறித்து விசாரித்து விட்டு பின்னர் தகவல் கூறுகிறேன்” என்று குறிப்பிட்டார்.
அதேவேளை, சீனா சென்றுள்ள மகிந்த ராஜபக்ச பௌத்த ஆலயம் ஒன்றுக்குச் சென்றிருப்பதுடன், சில கலந்துரையாடல்களிலும் பங்குபற்றியிருப்பதாக கூறப்படுகிறது.