மேலும்

நீரிழிவு சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல அனுமதி கேட்கிறார் பசில் – ராஜபக்சகளின் திருகுதாளங்கள்

basilநீரிழிவு நோய்க்கு மருத்துவ உதவியைப் பெறுவதற்கு அமெரிக்கா செல்வதற்கு மூன்று மாத அனுமதியைத் தர வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச  நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

திவிநெகும நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட பசில் ராஜபக்சவை, வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளதுடன் அவரது கடவுச்சீட்டையும் முடக்கி வைத்துள்ளது.

இந்த நிலையிலேயே அவர், நீரிழிவு நோய்க்கு அமெரிக்காவில் உள்ள சிறப்பு மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெறுவதற்கு டிசெம்பர் 10ஆம் நாள் தொடக்கம் மார்ச் 2ஆம் நாள் வரை, அமெரிக்கா செல்வதற்கு அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

எனினும், பசில் ராஜபக்சவை வெளிநாடு செல்ல அனுமதிப்பதற்கு சட்டமா அதிபர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த வழக்கை வரும் 25ஆம் நாள் விசாரிக்க கொழும்பு மேல்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

நீரிழிவு நோய்க்கு சிகிச்சை என்ற பெயரில் தனது குடும்பத்தினரைப் பார்க்கவே பசில் ராஜபக்ச அமெரிக்கா செல்ல முயற்சிப்பதாக தெரிய வருகிறது.

அண்மையில் ஒரு செவ்வியில் அவர், தனது மகளுக்கு அமெரிக்காவில் குழந்தை பிறந்துள்ளதாகவும், அதனைப் பார்ப்பதற்குக் கூட தன்னால் முடியாதுள்ளதாகவும் வருத்தத்துடன் கூறியிருந்தார்.

நிதிமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பசில் ராஜபக்ச, முதுகுவலி என்று காரணம் கூறி சிறைச்சாலை மருத்துவமனையிலும், பின்னர் தேசிய மருத்துவமனையின் கட்டண விடுதியிலும், விளக்கமறியல் காலத்தை கழித்திருந்தார்.

இவரைப் போலவே வெளிநாடு செல்ல நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்த யோசித ராஜபக்சவும், காலில் அறுவைச்சிகிச்சைக்காக அவுஸ்ரேலியா செல்ல வேண்டும் என்று நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருந்தார்.

அதற்குப் பின்னர் அவர் கொழும்பில் மராத்தன் ஓட்டப் போட்டியில் பங்கேற்றிருந்தால், அவருக்கு அவுஸ்ரேலியா நுழைவிசைவு மறுத்திருந்தது. நீண்ட இழுபறிக்குப் பின்னரே அவருக்கு நுழைவிசைவு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *